தமிழ் தமிழ் தமிழெனக் கூறும்-அது
அமிழ்தமிழ் தமிழ்தென மாறும்
அமிழ்துடன் உமைவர நாளும்
அழைத்தென் தமிழ்மொழி ஆகும்
பரணியை எழுதிட தாயும்
பந்தமும் பிடித்திடத் தூண்டும்
தரணியில் அமாவசை நாளும்
தமிழ்தர முழுமதி தோன்றும்
அரவணை சுருட்டி நம் மாலும்
அலைந்தது தமிழ்மொழிக் காகும்
பரவையின் மனைக்கிறை தூதும்
பயின்றது தமிழ் உணர் வாகும்
சூளையும் பொய்கை என்றாகும்
சூளைநோய் தீர்ந்துபொய் யாகும்
ஆளையும் கொடையையும் பாடும்
ஆற்றுப்படையெனும்பாடம்
சந்தமும் திருப்புகழ் பாடும்
சகலமும் திருக்குறள் ஓதும்
நந்தியின் களம்புகும் வீரம்
நந்திக் களம்பகம் பாரும்
விழும் மழை பொழிவதைப்பாடும்
விரிதிருப் பாவை விஞ்ஞானம்
கழுமரம் எரிந்திடச் சீறும்
கனல்மொழி தமிழ்மொழி வேதம்
